தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்நிலையில், இச்சம்பவத்தோடு தொடர்புடைய காணொலி என்று தாய் மகள் அழுகக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி சித்தரிக்கப்படது என்று தெரியவந்தது.
பரவி வரும் காணொலியின் முக்கியக் காட்சிகளைக் கொண்டு கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது dnm Madhu 786 என்ற யூடியூப் பக்கத்தில் மார்ச் 1, 2026 அன்று இந்தக் காணொலி பதிவிடப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அதில் இடம்பெற்றுள்ள தெலுங்கு மொழி வாசகங்களை மொழிபெயர்த்துப் பார்த்ததில், “அம்மாவின் அன்பை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்றும் அதற்குச் சம்மதம் என்றால் ஒரு விருப்பக் குறியீடு (Like)” இடுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த யூடியூப் தளத்தில் உள்ள அனைத்துக் காணொலிகளும் தெலுங்கு மொழியிலேயே அமைந்திருப்பதை ஆய்வின் மூலம் கவனித்தோம்.
இந்தக் காணொலியின் கேமரா கோணம் மற்றும் ஒளியமைப்பு முறைகளை உற்று நோக்கினால் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியில் தெளிவான மஞ்சள் நிறச் செயற்கை ஒளியைக் காண முடிகிறது.
மேலும் கேமராவைச் சுருக்கி விரிக்கும் (Zoom in zoom out) நுட்பம் பயன்படுத்தப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மிக முக்கியமாக இந்தக் காணொலியின் இறுதியில் படப்பிடிப்பை நிறுத்துவதற்கான கட்டளையான CUT என்று சொல்வதை நம்மால் தெளிவாகக் கேட்க முடிகிறது. இவற்றுள் இருந்து தற்போது பரவி வரும் காணொலி சித்தரிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வேறொரு சித்தரிக்கப்பட்ட காணொலியைத் தூத்துக்குடி குளத்தூர் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான காணொலி என்று தவறாகப் பரப்புகின்றனர் என்று தெரியவந்தது.