வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு திமுக எம்பி கனிமொழி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற கனிமொழியை அங்கு ஒர்க்கக் கூடிய மக்கள் அவரை விரட்டி அடித்ததாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
பரப்பப்படும் காணொலியை கூர்ந்து கவனிக்கும் போது, அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏந்தியபடி சிலர் வாகனத்தை சூழ்ந்து நிற்பது தெரிகிறது. திமுகவின் கூட்டணிக் கட்சியான விசிக தொண்டர்கள் ஏன் கனிமொழியை விரட்ட வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.
வைரலாகும் காணொலியின் கீ-பிரேம்களைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இதன் முழுமையான பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 'Behindwoods Air' என்ற யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட முழு காணொலியில் உண்மை நிலை முற்றிலும் வேறாக உள்ளது.
அதில், தொண்டர்கள் அன்புடன் கனிமொழியை பேசச் சொல்லி வற்புறுத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. "அக்கா நீங்க பேசுனா போதும், மைக் புடிச்சு பேசுனா போதும்" என்று மக்கள் உரிமையோடு கோரிக்கை வைப்பதை அதில் கேட்க முடிகிறது.
மக்களின் இந்த அதீத அன்பைக் கண்டு நெகிழ்ந்த கனிமொழி, வழிமறித்துப் பேசிவிட்டுச் செல்ல வேண்டும் என்று கேட்கும் அந்த அன்பிற்குத் தான் தலைவணங்குவதாகத் தனது உரையில் குறிப்பிடுகிறார். மேலும், தூத்துக்குடி வேட்பாளராக மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றியையும் அங்கேயே பதிவு செய்கிறார். இதன் மூலம் அவர் தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
Conclusion:
முடிவாக, கனிமொழியை மக்கள் அன்போடு பேச அழைத்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை, அவர் விரட்டியடிக்கப்பட்டதாகத் தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது இதன் மூலம் உறுதியாகிறது. மேலும், இது 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது