ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில், சமூக வலைதளங்களில் ஊதா நிற சிலிண்டர்கள் லாரியில் ஏற்றப்படும் ஒரு காணொலி பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மாட்டுச் சாணத்தைக் கொண்டு இந்த இயற்கை எரிவாயு சிலிண்டர்களை உருவாக்கியுள்ளதாகவும், இதன் விலை வெறும் 500 ரூபாய் மட்டுமே என்றும், இதில் 18 கிலோ எரிவாயு கிடைக்கும் என்றும் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் தயாரிப்பு ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்ற ரீதியில் பல பயனர்கள் இதனைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலியில் இருப்பது இன்டேன் 'எக்ஸ்ட்ராடேஜ்’ எரிவாயு என்றும் தெரியவந்தது.
பரப்பப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய, முதலில் உத்தரகாண்ட் சகோதரர்கள் இத்தகைய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனரா என்பது குறித்துத் தேடினோம். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களிலோ அல்லது அரசுத் தரப்பிலோ இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, காணொலியில் உள்ள ஊதா நிற சிலிண்டர்களின் பின்னணியை ஆய்வு செய்தபோது, அவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பது தெரியவந்தது.
இவை பிரத்யேகமாக வணிக மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவை. சாதாரண சிலிண்டர்களை விட 14 சதவீதம் வரை சமையல் நேரத்தைச் மிச்சப்படுத்தும் திறன் கொண்ட இவை, 19 கிலோ எடை கொண்டவை. மேலும், இவை வீட்டு உபயோகத்திற்காக விற்பனை செய்யப்படுபவை அல்ல என்பதும், மாட்டுச் சாணத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் ஆய்வில் உறுதியானது.
Conclusion:
சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த காணொலியில் இருப்பவை மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிலிண்டர்கள் அல்ல. அவை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வணிக ரீதியான பயன்பாட்டிற்கான 'இன்டேன் எக்ஸ்ட்ராடேஜ்' எல்பிஜி சிலிண்டர்கள் ஆகும். உத்தரகாண்ட் இளைஞர்கள் இதனை மலிவு விலையில் தயாரித்ததாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது.