தென்மேற்கு பருவமழை காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலியின் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் காணொலி இருப்பது ஜம்முவில் உள்ள தாவி ஆறு என்று தெரியவந்தது.
பரவி வரும் இந்த காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது Jammu Links News என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலியுடன் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில் கனமழை காரணமாக ஜம்முவில் உள்ள தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து தொடர்ந்து தேடுகையில், News18 ஊடகத்திலும் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ஜம்முவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து, நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் நிரம்பி வழிந்து, நான்காவது தாவி பாலத்திற்கு அருகிலுள்ள சாலையை அடித்துச் சென்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல் Lake City Times என்ற ஊடகத்திலும் தலைப்பில் இது குறித்து கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, தாவி, உஜ், பசந்தர், செனாப் மற்றும் ரவி ஆறுகள் எச்சரிக்கை மற்றும் அபாய அளவை மீறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, திருநெல்வேலியின் தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்று வைரலாகக் கூடிய காணொலியில் இருப்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள “தாவி” நதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்று தெரியவந்தது.