“ஒழுக்கமற்ற மாணவர் சமுதாயம், பாதுகாப்பில்லாத ஆசிரியர் சமூகம்! மொத்தமாக முடித்துவிட்ட ஸ்டாலின்” என்ற வாசகத்துடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவில், பள்ளி வகுப்பறையில் சீருடை அணிந்த மாணவன் ஒருவன், தனது ஆசிரியரைத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அங்கிருந்த சக மாணவர்களும் மற்றுமொரு ஆசிரியையும் அந்த மாணவனைத் தடுக்க முயல்கின்றனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாகக் குறிப்பிட்டுப் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் இந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய அதன் முக்கியக் காட்சிகளை (Keyframes) கொண்டு இணையத்தில் தேடினோம். ஆய்வின் முடிவில், 'நியூஸ் 18 தமிழ்நாடு' ஊடகத்தில் இது தொடர்பாக வெளியான செய்தியைக் கண்டறிந்தோம்.
2026, மார்ச் 05ஆம் தேதி வெளியான அந்தச் செய்தியின்படி, இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பது உறுதியானது. இது ஆந்திர மாநிலம், வீரவள்ளி பகுதியில் உள்ள ஜில்லா பரிசத் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்ததாகும். அங்கு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், பள்ளிக்குச் சரியாக வராத காரணத்திற்காக அவனது வகுப்பாசிரியர் அவரியைக் கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென அவரது நெஞ்சில் குத்தியுள்ளான். சக மாணவர்கள் உடனடியாக அவனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதே செய்தியை NDTV, News X உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், ஆந்திராவில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்தின் காணொலியை, தமிழ்நாட்டில் நடந்தது போலச் சித்தரித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுவது உறுதியாகிறது.