பெங்களூருவில் உபர் படகு சேவையைத் துவங்கியுள்ளதா?

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உபர் படகு சேவையை துவங்கி உள்ளதாக ஒரு தகவல் ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

By Ahamed Ali  Published on  8 Sep 2022 5:00 AM GMT
பெங்களூருவில் உபர் படகு சேவையைத் துவங்கியுள்ளதா?

இந்தியாவின் ஐ.டி. ஹப்பான பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பான பல வீடியோக்களும், ஃபோட்டோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல அமெரிக்க டாக்சி நிறுவனமான உபர் பெங்களூரில் படகு சேவையை துவக்கி இருபதாக ட்விட்டரில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Fact-check

இது குறித்த நம்பகத்தன்மையை அறிய உபர் போட்ஸ் குறித்து இணையத்தில் தேடினோம். அதன்படி தேம்ஸ் கிளிப்பர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், லண்டன் தேம்ஸ் நதியில் ஆகஸ்ட் 2020 முதல் உபர் நிறுவனத்துடன் இணைந்து உபர் படகு சேவையை தேம்ஸ் கிளிப்பர் நிறுவனம் இயக்கி வருவது தெரியவந்துள்ளது. மேலும், உபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஜனவரி 30, 2019 அன்று ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலகின் மிகப்பெரிய ரைட்ஷேரிங் நிறுவனமான உபர், மகாராஷ்டிரா கடல்சார் நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் உபர் படகு சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. தேவைக்கேற்ப சேவையான இது நகரின் பிரபலமான மூன்று கடற்கரை வழித்தடங்களான கேட்வே ஆஃப் இந்தியா, எலிஃபெண்டா தீவுகள் மற்றும் மாண்ட்வா ஜெட்டி ஆகியவற்றிலிருந்து வேகப் படகுகள் மூலம் போக்குவரத்தை வழங்கும் என்றும், பிப்ரவரி 1 முதல் இருக்கைத் திறன் அடிப்படையில் 6-8 இருக்கைகள் கொண்ட உபர் படகு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட உபர் எக்ஸ்எல் போன்ற படகு சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், பார்ச்சூன் இதழிலும் உபர் போட்டின் மும்பை சேவை குறித்த செய்தி வெளியாகியுள்ளது.


இது மட்டுமின்றி "உபரின் போட் சேவை குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானதாக இருக்கக் கூடும்" என பெங்களூருவின் ஹென்னூர் பகுதியைச் சேர்ந்த பவானி என்பவர் தி ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னல் (The Free Press Journal) செய்தி தளத்திடம் கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், "உபர் செயலியில் போட் சேவை குறித்து பார்த்த போது அதில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், வைரலாகியிருக்கும் அந்த போட்டோக்கள் கண்டிப்பாக மார்ஃபிங் செய்யப்பட்டதாகவே இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் இத்தகவலை உறுதிப்படுத்துவதற்காக, உபரின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்தோம், ஆனால் பெங்களூரில் உபர் படகு சேவையைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அதில் இடம்பெறவில்லை.

Conclusion

இவற்றின் மூலம் பெங்களூரில் உபர் நிறுவனம் படகு சேவையை துவக்கவில்லை என்பதும், சமூக வலைதளங்களில் பகிரப்படுபவை போலியானவை என்றும் உறுதியாகிறது.

Claim Review:As the heavy rain lashed Bengaluru, Uber has started Uber Boat service in that area.
Claimed By:Social Media Users
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Social Media
Claim Fact Check:False
Next Story