“பங்களாதேஷ் பன்றிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால்…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், காவலர் ஒருவரை மற்றொருவர் கல்லால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதில், காவலரை தாக்கும் நபர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மறைமுகமாக அவர் இஸ்லாமியர் என்பது போன்றும் கூறி இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ETV Bharat ஊடகம் கடந்த ஜூன் 15ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜூன் 09ஆம் தேதி, ராஞ்சியின் தல்தாலி ஓபி பகுதியில் உள்ள கதல் மோர் என்ற இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ETV Bharat வெளியிட்டுள்ள செய்தி
அப்போது, அவர்கள் ஆட்டோவை சாலையிலிருந்து அகற்ற கூறியபோது, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ ஓட்டுநர் போக்குவரத்து காவல்துறையினரிடம் கைகலப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு காவல்துறையினர் அவரைப் பிடித்து போக்குவரத்து சோதனை சாவடிக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர்.
அச்சமயம், ஹான்ஸ் யாதவ் என்கிற புட்டி மற்றும் முன்னா யாதவ் என்கிற அகிலேஷ் யாதவ் ஆகியோர் போக்குவரத்து காவல்துறையினரைத் தாக்கினர். மேலும், அவர்கள் ஊர்க்காவல் படை வீரர் ரோஹித் கஞ்சூவை கல்லால் தாக்கினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Dainik Bhaskar மற்றும் Daily Pioneer உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. எந்த ஒரு செய்தியிலும் இவ்விருவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும், அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று அவர்களது பெயரைக் கொண்டு அறியமுடிகின்றது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் காவலர்களை தாக்கியதாக வைரலாகும் காணொலியில் இருப்பது இஸ்லாமியர்கள் இல்லை என்றும் அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.