"அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள். ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில், இரு வேறு புத்தர் சிலைகள் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இவை அயோத்தியில் கிடைத்ததாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இரு புகைப்படங்களும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.
புகைப்படம் 1:
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய இரு புகைப்படங்களையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, முதலில் உள்ள புகைப்படத்துடன் THE WONDER THAT WAS INDIA என்ற Blog இணையதளம் 2018ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள டக்ஸீலா என்ற இடத்தில் உள்ள புத்தர் சிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “அது கிமு 700 ஆம் ஆண்டிலேயே, ஐரோப்பாவின் பெரும்பகுதி இருண்ட காலத்தில் இருந்தபோது, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான்) உள்ள பண்டைய காந்தார ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள டக்ஸீலத்தில் ஒரு சிறந்த பல்கலைக்கழகம் இருந்தது. இந்த பண்டைய கல்வி மையம், ஏராளமான துறைகளில் கல்வியை வழங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Hybriques வெளியிட்டுள்ள செய்தி
வைரலாகும் அதே புகைப்படத்துடன் “டக்ஸீலா பல்கலைக்கழகம்” என்று குறிப்பிட்டு Hybriques என்ற இணையதளத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இப்புகைப்படம் பாகிஸ்தானில் உள்ள டக்ஸீலாவில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
புகைப்படம் 2:
தொடர்ந்து, இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி Al Jazeera ஆப்கானிஸ்தானின் மெஸ் அய்னக் என்ற பகுதியில் உள்ள புத்தர் சிலை என்று வைரலாகும் அதே புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும், “சீன உலோகவியல் குழும நிறுவனம் (MCC), பண்டைய பௌத்த நகரமான மெஸ் அய்னக்கின் இடிபாடுகளுக்கு அடியில் கிடக்கும் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தாமிரத்தை பிரித்தெடுக்க விரும்புகிறதாக தெரிவித்துள்ளது.
மெஸ் அய்னக்கில் 10 சதவீதம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது.சிலர் அவ்விடத்தில் எதிர்கால கண்டுபிடிப்புகள் ஆப்கானிஸ்தானின் வரலாற்றையும் பௌத்தத்தின் வரலாற்றையும் மறுவரையறை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று நம்புகின்றனர்.
மெஸ் அய்னக் தொடர்பாக Al Jazeera வெளியிட்டுள்ள செய்தி
ஆப்கானிஸ்தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் காதிர் டெமோரி மெஸ் அய்னக்கின் இடிந்து விழும் மடங்கள் மற்றும் இடிபாடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க எதிர்த்துப் போராடுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Huffpost ஊடகமும் 2015ஆம் ஆண்டு இதே செய்தியை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அயோத்தியில் கண்டெடுக்கப்பட்டுள்ள புத்தரின் சிலை என்று சமூகவலைதளங்களில் வைரலாகக் கூடிய இரு புகைப்படங்களும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலைகளின் புகைப்படங்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.