Fact Check: முருக பக்தர்கள் மாநாட்டு கூட்டம் என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக

மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய கூட்டம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali
Published on : 24 Jun 2025 12:40 AM IST

Fact Check: முருக பக்தர்கள் மாநாட்டு கூட்டம் என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக
Claim:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக கூடிய கூட்டம்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டின் போது எடுக்கப்பட்டது

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் இந்து முன்னணியினர் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 22) நடைபெற்றது‌. இந்நிலையில், “இது பெரியார் மண் இல்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண். மதுரை” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கூடிய கூட்டம் என்று காணொலி வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, கடந்த ஜூன் 13ஆம் தேதி Gard Greenish Channel என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி எவ்வித தகவலுமின்றி பதிவிடப்பட்டிருந்தது. இதன்மூலம் முதற்கட்டமாக இக்காணொலி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற தினமான ஜூன் 22ஆம் தேதிக்கு முன்பே பதிவேற்றப்பட்ட பழைய காணொலி என்று தெரியவந்தது.

தொடர்ந்து அக்காணொலியில் “மணி பென்னாகரம்” என்ற பெயர் பாமக கொடி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இப்பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியபோது, கடந்த மே 13ஆம் தேதி Mani_Pennagaramm என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “வன்னியர் சங்க மாநாடு 250 ஏக்கரில் நடைபெற்றது. அதில் ஏழு ஏக்கரில் பிரம்மாண்ட முறையில் பார்க்கும் வசதி செய்யப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டும் இதோ உங்களுக்காக” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்காணொலி வன்னியர் சங்க மாநாட்டின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது. மேலும், அவர் பாமகவின் ஈரோடு மாநகர மாவட்ட சமூக ஊடக பேரவையின் தலைவர் என்று அவரது இன்ஸ்டாகிராம் பயோவின் மூலம் தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, மாலைமலர் ஊடகம் கடந்த மே 11ஆம் தேதி இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று (மே 11) மாலை தொடங்கியது.

இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில் பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சன் நியூஸ், தந்தி டிவி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பாமக மாநாடு குறித்து செய்தி வெளியிட்டுள்ள மாலைமலர்

Conclusion:

நம் தேடலில் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டு காணொலியை மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.

Claim Review:முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கூடிய கூட்டம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டின் போது எடுக்கப்பட்டது
Next Story