Fact Check: காஸா பத்திரிக்கையாளர்கள் ராக்கெட் ஏவுகின்றனரா? உண்மை அறிக
காஸாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் ராக்கெட் ஏவுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By - Ahamed Ali |
கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் காஸா மீது இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தற்போது வரை 242 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், “Press” என்று குறிக்கும் பத்திரிக்கையாளர்கள் உடை அணிந்த இருவர் ராக்கெட் குண்டுகளை ஏவும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “காஸாவில் அப்பாவி நிருபர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ராக்கெட் ஏவுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருப்பவர்கள் சிரியா நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என்று தெரியவந்தது. வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, suryana97.gss என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய இருவரது புகைப்படம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “தற்போது Qardahah நகரின் மீது குண்டு வீசிக்கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Qardahah என்பது சிரியாவில் உள்ள ஒரு நகரம். மேலும், அப்புகைப்படத்தில், mhmd.alfaisal, jamel_alhasan என்ற இன்ஸ்டாகிராம் பக்கங்கள் டேக் செய்யப்பட்டிருந்தன.
இவர்களது பக்கங்களை ஆய்வு செய்தபோது, இருவரும் தங்களைப் பத்திரிக்கையாளர்கள் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் காணொலி குறித்து தேடியதில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இட்லிப் என்ற சிரியாவைச் சேர்ந்த நகரத்தை குறிப்பிட்டு இதே காணொலி “ஜாமல் அல் ஹசன்” என்ற பொயருடன் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்தது.
Conclusion:
முடிவாக, கடந்த 2023ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ராக்கெட் ஏவியபோது எடுக்கப்பட்ட காணொலியை, காஸாவில் உள்ள பத்திரிகையாளர்கள் ராக்கெட் ஏவியதாக தவறாக பரப்பி வருகின்றனர் என்று நம் தேடலில் தெரியவந்தது.