“மணிப்பூரில் ஒரு மசூதியில் வைத்திருந்த வெடிப்பொருள்கள் ஆயுதங்கள் இவை கிடைத்தவைகள். மற்ற மசூதிகளின் நிலை என்னவோ” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில் பணம், வெடிபொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி மியான்மரில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
முதலில் வைரலாகும் காணொலியை ஆய்வு செய்கையில் வீரர்கள் அணிந்திருந்த ராணுவ சீருடையில் BNRA என்று லோகோ இருப்பதை அறியமுடிந்தது. BNRA என்பது மியான்மரில் இயங்கி வரும் ராணுவ அமைப்பான பர்மா தேசிய புரட்சிகர ராணுவத்தைக் குறிக்கிறது. BNRAவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள BNRAவின் லோகோவையும், வைரல் காணொலியில் உள்ள வீரர்களின் சட்டைகளில் இடம்பெற்றுள்ள லோகோவையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டும் ஒன்றாக இருந்தன. இதன்மூலம் வைரலாகும் காணொலியில் இருப்பது பர்மா தேசிய புரட்சிகர ராணுவம் என்பது தெரியவந்தது.
இரு லோகோக்களுக்குமான ஒப்பீடு
காணொலியின் இறுதியில், நீலம், சிவப்பு மற்றும் பச்சை நிறக் கொடியின் மையப்பகுதியில் வெள்ளை வட்டத்துடன், அதன் உள்ளே ஒரு உருவம் வரையப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. இக்கொடியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அந்தக் கொடி சின் தேசிய அமைப்பின் ஆயுதப் பிரிவான சின் தேசிய பாதுகாப்புப் படைக்கு (CNDF) சொந்தமானது என்று தெரியவந்தது. இது மியான்மரில் உள்ள சின் மாநிலத்திலிருந்து செயல்படும் ஒரு கிளர்ச்சிக் குழுவாகும்.
தொடர்ந்து காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது LaiMi Page என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், "CB குழுவும் அவர்களின் மூதாதையர்களும் Falam கிராமத்தில் 268 பேரை தோற்கடித்து ஆயுதங்களையும் பணத்தையும் கைப்பற்றினர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு CB என்பது Chin Brotherhood என்பதை குறிக்கிறது.
தொடர்ந்து தேடுகையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மியான்மர் ஊடகமான Khit Thut News தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருந்தது. அதில், பர்மிய மொழியில் “ஃபாலாம் நகரத்திற்கான யுத்தத்தில் லட்சக்கணக்கான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. ஏப்ரல் 9ஆம் தேலி சின் மாநிலத்தில் உள்ள முழு ஃபலாம் நகரத்தையும் இறுதித் தாக்குதல் நடத்தி கைப்பற்றிய பிறகு, Chin Nyinaung குழு ராணுவ கவுன்சிலிலிருந்து லட்சக்கணக்கான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை Tachileik மற்றும் Myanmar-Now உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மணிப்பூரில் உள்ள ஒரு மசூதியில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக வைரலாகும் காணொலி உண்மையில் மியான்மரில் ராணுவ பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.