“மக்களுக்கான தலைவனின் பேச்சில் வெறும் வார்த்தைகள் இருக்காது. உணர்வுப்பூர்வமான உண்மைகள் மட்டுமே இருக்கும்.!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், ஆப்ரிக்காவில் உள்ள புர்கினா பாசோ நாட்டின் ராணுவ அதிபர் இப்ராஹிம் டிராரே ஆப்பிரிக்க நாட்டின் வளங்கள் குறித்தும் ஆப்பிரிக்காவை மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு ஒடுக்குகிறது என்பது குறித்தும் பேசுவது பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய உண்மையில் இவ்வாறு இப்ராஹிம் டிராரே பேசினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இவ்வாறு அவர் பேசியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்த்தோம். அப்போது, Univers Inspirant என்ற யூடியூப் சேனலில் கடந்த மே 25ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி “Speech of Captain Ibrahim Traore!|We're Recording Every Lie You Tell About Africa!” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்தது.
காணொலியின் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “இக்காணொலி முற்றிலும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே கற்பனையாக உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த யூடியூப் சேனலை ஆய்வு செய்கையில் அதில் இப்ராஹிம் டிராரே குறித்து பல்வேறு பொழுதுபோக்கு காணொலிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய அதனை Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் இக்காணொலி 99.9% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவை தந்தது.
Hive Moderation ஆய்வு முடிவு
Conclusion:
முடிவாக, நம் தேடலில் புர்கினா பாசோ நாட்டின் அதிபர் இப்ராஹிம் டிராரே மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் ஆப்ரிக்காவின் வளங்கள் குறித்து பேசியதாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.