“அப்பா மகளை திருமணம் செய்தார். கோபத்தில் அம்மா மகனை திருமணம் செய்து கொண்டார். இனிய மார்க்கம்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைத்தளங்களில் (Archive) இரு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில், கழுத்தில் மாலையுடன் இரு வேறு ஆண் மற்றும் பெண் சிறுவர் சிறுமியருடன் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளையே மணந்து கொண்டதாக கூறி இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப் புகைப்படங்கள் குர்ஆன் மனனம் செய்து முடித்த பிறகான கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய இரண்டையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படம் Tajweed ul Quran என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “தந்தை மற்றும் மகள் இருவரும் சேர்ந்து குர்ஆனை மனனம் செய்து ஹாஃபிஸ் பட்டம் பெற்றுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Islamic Board இணையதளத்தில் உள்ள பதிவு
Pakistan peace full என்ற பேஸ்புக் பக்கத்திலும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், தந்தை மகள் இருவரும் சேர்ந்து குர்ஆனை மனனம் செய்துள்ளனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி Islamic Board என்ற இணையதளத்திலும் இதே தகவலுடன் வைரலாகும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு இது குர்ஆன் மனனம் செய்து முடித்த பிறகு பெறப்படும் ஹாஃபிஸ் பட்டம் பெற்ற போது எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
தொடர்ந்து, இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படத்தை Poshto song என்ற ஃபேஸ்புக் பயனர், தனது மகன் குர்ஆனை ஓதி முடித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் பயனரின் பதிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த குழந்தைகளை தங்களது பெற்றோரே திருமணம் செய்து கொண்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள் தவறானவை உண்மையில் புகைப்படத்தில் இருக்கும் சிறுவர்கள் குர்ஆனை ஓதி முடித்ததற்காக எடுக்கப்பட்டது என்று நிரூபிக்க முடிகிறது.