இந்து முன்னணி சார்பில் மதுரையில் வரும் ஜுன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், “முருகன் கொடி பறக்குதா” என்ற கேப்ஷனுடன் கொடியுடன் கார்கள் அணிவகுத்து வரும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி மராட்டியத்தில் சிவ சேனா கட்சியினர் காரில் ஊர்வலமாக சென்ற போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய காணொலியை முதலில் ஆய்வு செய்தோம். அதில், “Pune's First Sensory Living Experience” என்ற வாசகத்துடன் அணிவகுக்கும் கார்களுக்கு பின்னால் ஒரு பேனர் இடம்பெற்றிருந்தது. இதனை கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது மராட்டிய மாநிலம் புனேவின் கல்யாணி நகரில் உள்ள Nyati Evoque அடுக்குமாடி குடியிருப்பின் விளம்பரம் என்று தெரியவந்தது. இதன் மூலம் முதற்கட்டமாக இந்நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றிருக்கலாம் என்று அறியமுடிகிறது.
Nyati Evoqueன் விளம்பர பேனர்
தொடர்ந்து வைரலாகும் காணொலியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “சிவசேனா பவனை நோக்கி விரையும் சக்கரங்கள்(கார்கள்)” என்ற கேப்ஷனுடன் கடந்த ஜூன் 12ஆம் தேதி Akhand BharatBhagwaPremi என்ற யூடியூப் சேனல் வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டுள்ளது.
மேலும், சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் ஃபேன் பேஜ் வைரலாகும் அதே காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவசேனா என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளது. சிவ சேனா மராட்டிய மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி. இதன் மூலம் இந்நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றது தான் என்று தெரிய வருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் பொது கொடியுடன் அணிவகுத்த கார்கள் என்று வைரலாகும் காணொலி உண்மையில் மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் நடத்திய கார் அணிவகுப்பின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.