அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேரை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று (ஜூன் 12) அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. தற்போது வரை இவ்விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தைத் தொடர்ந்து, தீப்பிடித்த கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து மக்கள் விழுவதைப் போன்ற காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பரவி வருகிறது. ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சி என்று இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான காணொலி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி உண்மையாக அஹமதாபாத்தில் எடுக்கப்பட்டது தானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்டு பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, “மளமளவென பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்க கீழே குதித்த 3 உயிர்கள் பலி” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் காணொலி தொடர்பான செய்தியை தந்தி டிவி கடந்த ஜூன் 10ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அதில், “டெல்லியின் துவாரகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே குதித்த மூன்று பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது”. இதே செய்தியை சத்தியம் டிவியும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
மேலும், கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, “துவாரகாவின் செக்டார் 13இல் உள்ள ஷாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒன்பதாவது-பத்தாவது மாடியில் உள்ள இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற, இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பால்கனியில் இருந்து குதித்து உயிரிழந்தனர்” என்று Times of India செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் டெல்லியின் துவாரகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொலியை ஏர் இந்தியா விமான விபத்துடன் தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்தது.