Fact Check: பெரியார் மையம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டு இருக்கும் கட்டிடத்தின் புகைப்படம்? உண்மை அறிக
ஹிந்தி மொழியில் பெரியார் மையம் என்று எழுதப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கட்டிடம் ஒன்றின் புகைப்படம் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 25 Feb 2025 7:59 PM IST
Claim: பெரியார் மையம் என்று ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டிடத்தின் புகைப்படம்
Fact: இக்கட்டிடம் டெல்லியில் உள்ளதால் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழிக் கொள்கையின் மூலம் ஹிந்தியை ஒன்றிய அரசு திணிக்கிறது என்ற கருத்தை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர். இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொழி கொள்கைக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், “இந்த ஹிந்தி மொழியில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கருப்பு மை பூசுவார்களா??? தமிழக மக்களை இன்னும் அந்த கால மக்கள் மனநிலையில் எண்ண வேண்டாம்… மாற்றம் மிக விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது…
திராவிட அமைச்சர்களின் குழந்தைகள் எத்தனை அரசு தமிழ் பள்ளிகளில் படிக்கிறார்கள் திராவிட தலைவர்கள் மும்மொழி கொள்கை மூலமாக எத்தனை பள்ளிக்கூடம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அதன் மூலமாக எவ்வளவு வருமானம் வருகிறது என்று புரிந்து கொண்டார்கள்…. பழைய காலத்தில் மொழியால் ஆட்சியை பிடித்த கட்சி இன்று அதே மொழி பிரச்சனையை அவர்களே உருவாக்கி ஆட்சியை இழக்க போகிறது... கள நிலவரம் இதுதான்..” என்ற நீண்ட கேப்ஷனுடன் கட்டிடம் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
“பெரியார் மய்யம்” என்ற பெயர் தாங்கிய கட்டிடத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் “Periyar Centre”, “पेरियार केन्द्र” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்தி திணிப்பை முற்றாக எதிர்த்த பெரியாரின் பெயர் ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதாக கூறி இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ள பெரியார் மையம் டெல்லியில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்தபோது, பெரியார் மேலாண்மை மற்றும் கணினி கல்லூரி (Periyar Management And Computer College) என்ற கல்லூரியின் தகவல் Just Dial இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அதில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ள அதே கட்டிடத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வி மையம் டெல்லியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
PMCC இணையதளம்
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு Periyar Management And Computer College குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “பெரியார் மேலாண்மை மற்றும் கணினி கல்லூரி (PMCC) அதன் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்கும் ஒரு ஆற்றல்மிக்க நிறுவனமாகும்.
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான ஈ.வே.ராவின் நினைவாக இக்கல்லூரி பெயரிடப்பட்டது. தந்தை பெரியார் என்று அன்புடன் அழைக்கப்படும் ஈ.வே. ராமசாமி என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது டெல்லியின் ஜசோலா பகுதியில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவேறு புகைப்படங்களின் வேறுபாடு
Conclusion:
நம் தேடலின் முடிவாக பெரியார் மையம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்தில் இருக்கக்கூடிய இடம் டெல்லியில் அமைந்துள்ளதால் ஹிந்தி மொழியில் பெரியார் மையம் என்று எழுதியுள்ளனர் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.