Fact Check: ஈரான் இஸ்ரேல் போரின்போது ஏவப்பட்ட ஏவுகணைகளை படம்பிடித்தாரா விமானி? உண்மை என்ன

விமானி ஒருவர் ஈரான் இஸ்ரேல் போரின்போது ஏவப்பட்ட ஏவுகணைகளை படம் பிடித்ததாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 26 Jun 2025 1:01 AM IST

Fact Check: ஈரான் இஸ்ரேல் போரின்போது ஏவப்பட்ட ஏவுகணைகளை படம்பிடித்தாரா விமானி? உண்மை என்ன
Claim:விமானி ஒருவர் ஈரான் இஸ்ரேல் போரின் போது ஏவப்பட்ட ஏவுகணையை படம் பிடித்துள்ளார்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், “ஈரான் இஸ்ரேல் போரை மிக அருகில் படம் பிடித்த விமானி” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், விமான காக்பிட்டினுள்ளே இருந்து விமானி ஒருவர் ஏவுகணைகள் ஏவப்படும் காட்சிகளைப் பதிவு செய்வது தெரிகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்தது.

வைரலாகும் காணொலி குறித்து உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ஈரான் ஏவிய ஏவுகணைகளை நடு வானில் விமானி ஒருவர் படம் பிடித்த காட்சி என்று Business Insider, Arab News Pakistan உள்ளிட்ட ஊடகங்கள் கடந்த ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை. மாறாக வானில் ஏவுகணைகள் பாயும் காட்சி மட்டும் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வைரலாகும் காணொலி குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, PipTalkies என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (PIA) விமானி ஒருவர், இஸ்ரேலை நோக்கிச் செல்லும் ஈரானிய ஏவுகணைகளின் நேரடி காட்சிகளைப் படம் பிடித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதன் இறுதியில் “இந்தக் காட்சிகள் சரிபார்க்கப்படவில்லை; பகுப்பாய்வு நடந்து கொண்டிருக்கிறது. பார்வையாளரின் விருப்பத்திற்குரியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்காணொலி உறுதியான செய்தி இல்லை என்பது தெரிகிறது.


PipTalkies வெளியிட்டுள்ள பொறுப்பு துறப்பு

மேலும் PipTalkies பக்கத்தை ஆய்வு செய்ததில் அதில் உண்மைக்கு புறம்பான பல்வேறு AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலிகள் பதிவேற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய DeepFake - O - Meter இணையதளத்தில் பதிவேற்றி பத்து டிடெக்டர்களைக் கொண்டு ஆய்வு செய்தோம். அதில் ஆறு டிடெக்டர்கள் மட்டும் முடிவைத் தந்தன, அவற்றில் நான்கு டிடெக்டர்கள் 71% முதல் 100% வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தன.


DeepFake - O - Meter ஆய்வு முடிவு

Conclusion:

முடிவாக, ஈரான் இஸ்ரேல் போரை மிக அருகில் விமானி படம் பிடித்ததாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:விமானி ஒருவர் ஈரான் இஸ்ரேல் போரின் போது ஏவப்பட்ட ஏவுகணைகளை படம் பிடித்துள்ளார்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
Next Story