ஜி7 உச்சிமாநாடு இந்த ஆண்டு கனடா தலைமையில் நடைபெற்றது. கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள Kananaskisல் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கனடா நாட்டின் அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத நாடான இந்தியா கலந்து கொண்டது.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க கனடா சென்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி பரவி வருகிறது. அதில், சாலையில் கார்கள் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து அணிவகுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு என்று தெரிய வந்தது.
பரவி வரும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது, கனடாவைச் சேர்ந்த Bruna e Joel என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி ஜூன் 16ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
அதில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டிற்கு செல்லும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பதிவில் "உலகின் ஏழு பெரிய பொருளாதார நாடுகளான ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் யுனைடட் கிங்டம் ஆகிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் வருடாந்திர கூட்டமே G7 உச்சிமாநாடு.
பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற அவசர உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அதில் விவாதிக்கப்படுகின்றன. 2025ஆம் ஆண்டில், ஆல்பர்ட்டாவில் உள்ள Kananaskisல் இந்த கூட்டம் நடைபெறுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே காணொலியின் மற்றொரு கோணக் காட்சியை Rasagulla Reddy என்ற ஃபேஸ்புக் பயனரும் பதிவிட்டுள்ளார்.
Conclusion:
முடிவாக, கனடாவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்புடன் சென்ற காணொலியை கனடா சென்ற பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.