“இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் அட்டுழியம் செய்யும் புள்ளிங்கோக்களுக்கு இது போன்ற தண்டனையை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போல தமிழ் நாடு காவல் துறையும் கொடுத்தால்,50% குற்றங்கள் குறையும்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், காவல்துறையினர் இளைஞர்களை காலில் லத்தியால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இவ்விளைஞர்கள் இருசக்கர வாகனங்களுடன் அட்டூழியத்தில் ஈடுபட்டதற்காக இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறி இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த மே 27ஆம் தேதி Dilip Kumar என்ற PTI செய்தியாளர் வைரலாகும் அதே காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ஆந்திரப்பிரதேசத்தின் தெனாலியில், ஒரு கான்ஸ்டபிள் அளித்த புகாரைத் தொடர்ந்து, பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளால் பகிரங்கமாகத் தாக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மே 27ஆம் தேதி India Today ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, காவல்துறையினரால் தாக்கப்பட்ட நபர்கள் தெனாலி மற்றும் மங்களகிரியைச் சேர்ந்த செப்ரோலு ஜான் விக்டர் (25), ஷேக் பாபுலால் என்கிற கரிமுல்லா (21) மற்றும் டோமா ராகேஷ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கான்ஸ்டபிள் கண்ணா சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில், அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் கான்ஸ்டபிளைத் தாக்கியதாக மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
India Today வெளியிட்டுள்ள செய்தி
மேலும், தெனாலியில் இளைஞர்களை காவல்துறையினர் பகிரங்கமாக தாக்கும் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை கோரியுள்ளது மனித உரிமைகள் மன்றம் (HRF) என்று The New Indian Express ஊடகம் கடந்த மே 28ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களுடன் அட்டூழியத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி தவறானது. உண்மையில், அது ஆந்திர மாநிலம் தெனாலியில் காவலரை தாக்கியதற்காக மூன்று இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியது தொடர்பான காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.