பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய அரசு யுபிஐ பரிவர்த்தனை முறையை 2016ஆம் ஆண்டு கொண்டுவந்தது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் பெறப்படாது என்று கூறி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், யுபிஐ மூலமாக 2,000 ரூபாய்க்கு அதிகமான பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் 18 விழுக்காடு வரி விதிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசித்து வருவதாக சமூக வலைதளங்களில் (Archive) தகவல் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் நிதி அமைச்சகம் இதனை மறுத்துள்ளது எனவும் தெரியவந்தது.
உண்மையில் இத்தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, News 18 Tamilnadu ஊடகம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “யுபிஐ மூலம் 2,000 ரூபாய்க்கும் மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News 18 Tamilnadu வெளியிட்டுள்ள செய்தி
மேலும், “யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது பற்றி வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில் The Hindu ஊடகம் ஏப்ரல் 19ஆம் தேதி இதுதொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “சில கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைக்கு Merchant Discount Rate (MDR) போன்ற சில கட்டணங்களுக்கு GST விதிக்கப்படுகிறது.
ஜனவரி 2020 முதல், தனிநபரிடமிருந்து வணிகருக்கு (P2M) மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணத்தை Central Board of Direct Taxes (CBDT) நீக்கியுள்ளது. எனவே "தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணமும் வசூலிக்கப்படாததால், இந்த பரிவர்த்தனைகளுக்கு GST வரிவிதிப்பு பொருந்தாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சகம் PIB வாயிலாக இத்தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் யுபிஐ மூலம் 2000 ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால் 18 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளதாக வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.