Fact Check: ஐஏஎஸ் தேர்வில் முறைகேடில் ஈடுபட்ட வடமாநில மாணவர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
உத்திரபிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில் ஐஏஎஸ் தேர்வின் போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali
Claim:சிவில் சரிவீஸ் தேர்வில் உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மாணவர்கள் முறைகேடு செய்தனர்
Fact:பரவும் தகவல் தவறு. இது உத்திர பிரதேச சட்டக் கல்லூரி தேர்வில் நடைபெற்ற முறைகேடு
“உ.பி, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களின் ஐஏஎஸ் தேர்வு மையங்கள் !!! இந்திய ஆட்சி முறையின் எதிர்காலம்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், வகுப்பறையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் தங்களது தேர்வுக்கான விடைகளை காப்பி அடிப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு, வடமாநிலங்களில் ஐஏஎஸ் தேர்வின் போது நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இந்நிகழ்வு உத்தரபிரதேசத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி தேர்வின் போது நடைபெற்றது தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதைக் கண்டறிய அதன் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, National Students Union of India என்ற ஃபேஸ்புக் பக்கம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டிருந்தது. மேலும், அதில் “உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி தேர்வில் முறைகேடு நடக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். தேர்வில் முறைகேடு செய்ததாக 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கூடுதலாக, அவத் சட்டக்கல்லூரியில் 12 மாணவர்களும், இரண்டாவது ஷிப்ட் தேர்வின் போது TRC சட்டக்கல்லூரியில் 25 மாணவர்களும் பிடிபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Zee News ஊடகமும் வெளியிட்டுள்ளது.
மேலும், Dainik Bhaskar வெளியிட்டுள்ள செய்தியின் படி, பாரபங்கி நகர சட்டக் கல்லூரியில் தேர்வில் நடைபெற்ற மோசடி ஃபேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட சட்டத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனுடன், நகர சட்டக் கல்லூரிக்கு இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த 6 ஆண்டுகளுக்கு இக்கல்லூரியை தேர்வு மையமாக மாற்ற வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.